ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகார வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
ஆரம்பத்திலேயே உடனடி நடவடிக்கையை எடுக்கத்தவறினால் இலங்கையில் மீண்டுமொரு கலவரம் ஏற்படுவதை தடுக்க முடியாமற் போய்விடும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகி வரும் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன பல தடவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
அதேபோல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். எனினும் இந்த முறைப்பாடு மற்றும் மனு குறித்த விசாரணை இதுவரை நடைபெறவில்லை என்ற விமர்சனம் காணப்படுகின்றது. இந்த நிலையில் கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
(02:39) அந்த சட்டத்தரணி பல தடவைகள் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். இப்படியான பிரச்சினைகளில் தலையீடு செய்து குரல் கொடுப்பதற்காகவே சட்டத்தரணிகள் சங்கம் இருக்கின்றது. சட்டத்தரணிகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக முன்னிலையாவது சட்டத்தரணிகளின் அடிப்படை உரிமையாகும். உடனடியாக அந்த சட்டத்தரணிக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படாமல் அநீதியே ஏற்படும். அத்துடன் இளைஞர்களிடையே ஆத்திரமூட்டும் உணர்வுகள் ஏற்பட்டு மீண்டும் கலவரத்திற்கே அது வழிவகுக்கும். இளைஞர்கள் இந்த நாட்டில் சட்டம் மீது நம்பிக்கையிழந்த படியினால் கலவரங்கள் ஏற்பட்டதை அறிகிறோம். இன்று சட்டம் அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவே செயலாற்றுகின்றது. எனினும் மக்கள் இந்த தடைகளை தகர்ப்பதற்காக முன்னிலையாக வேண்டும்” என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை